சிவன் என்ற சொல்லோ சைவம் என்ற சொல்லோ சங்கப்பாடல்களில் எங்கும் கிடையாது. இதனால் இச்சமயம் சங்ககாலத்தில் இல்லையென கூற இயலாது, மாறாய் முக்கட்செல்வன், நீலமணிமிடற்றுஒருவன், கணிச்சியோன்,ஆதிரையன் என்ற சொற்கள் சிவனைக் குறிப்பதாய் கருதப்படுகிறது! சிவனின் தோற்ற அடையாளங்களையே சங்கப்பாடல்கள் கொண்டுள்ளன.
*செந்நிறத்தவன், செஞ்சடையன், அச்சடையையும் அவிழ்ந்து தொங்குவது(எரிமருள் அவிர் சடை)
*அவனது கழுத்து அழகானது(மணிமிடறு) கருநிறத்தது(நீலமணி மிடறு,கறைமிடறு)
*நெற்றியில் இமையாத முக்கண்ணை கொண்டதால் முக்கண்செல்வன் என அழைக்கப்பட்டார்
*ஆயுதமாய் கணிச்சியும், மழுவையும் ஏந்தியவர்(சூலம் சங்கப்பாடல்களில் இல்லை)
தலையிலும், மார்பிலும் கொன்றைமலர் சூடியவர். இவ்வாறு பூ அணிந்து போரிடும் குழுவினர்பற்றி சங்கப்பாடல்களில் நிறைய உண்டு. இது குழுக்களை அடையாளப்படுத்த உதவியது. (பணம்பூ சேரனுக்கும், ஆத்திப்பூ சோழனுக்கும், வேப்பந்தார் பாண்டினும், வெட்சிப்பூ ஆநிரை கவர்வோரும்,கரந்தைப்பூ ஆநிரை மீட்போரும், வெற்றிகொள்ளும்போது உழிஞைப்பூ அணிந்தும் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.)
சங்கப்பாடல்களில் கணிச்சியோன் என்றபெயர் பல இடங்களில் வருகிறது. கணிச்சி என்பது சிவன் கையில் ஏந்தியுள்ள கருவி, இதன் சரியான வடிவம் சிற்பபுத்தகங்களில் இல்லை. சங்கப்பாடல்களில் ஒரே ஒரு இடத்தில் மட்டும், "கையது கணிச்சியோடு மழுவே, மூவாய் வேலும் உண்டு" என்று கூறுகிறது. மூவாய் வேல் என்பது சூலாயுதத்தை குறிக்கும், வேறு எந்தப்பாடலிலும் சிவனுக்குரிய ஆயுதமாய் சூலத்தை கூறவில்லை.
கணிச்சி என்பது குழி தோண்டவும், பாறைகளை உடைக்கவும் பயண்பட்ட கருவியென தெரிகிறது. கணிச்சி (tonka) என்பதற்கு சிவனின் ஆயுதம் என்றும் உளி என்றும் சில நூல்கள் கூறுகிறது.
கிணறு அகழ்வோர் கூரான கணிச்சியை பயன்படுத்தியதாய் அகநானூற்றின் 21,399 ம் பாடல் கூறுகிறது! கற்கால ஆயுதங்களில் கல்கோடாரியும் முக்கியமான ஒன்று. கணிச்சி ஆயுதம் பூண்ட மற்றொருவனாய் கூற்றுவனை(எமன்)யும் அகம் கூறுகிறது!
ஈர்ஞ்சடை அந்தணன், பிங்குநீர் சடைக்கரந்தான், அந்தணருக்கு அருமறை பகர்ந்தான் என்ற சொற்கள் வேதமுதன்மையை சைவம் ஏற்றுகொண்ட பின்னர் பொருந்திவரும் சிவனின் குணநலன்கள். ஆனால் இவையாவும் சங்கப்பாடல்களில் கூறப்படுவதற்கு நிறைய முரண்கள்உள்ளது.
தொல்காகாப்பியத்தில் திணைதெய்வங்களாய் வரும் இந்திரனும், வருணனும் சங்கப்பாடல்களில் இடம்பெறா தெய்வங்கள். தொல்காப்பியம் தொகைநூல்களுக்கு முந்தியவை என்றும் பிந்தியவை என்றும் இரு கருத்து உண்டு. இப்புதிர்களுக்கு விடை கிடைக்கும்போது மேலேயுள்ள முரணுக்கும் விடை கிடைக்கும்.
மேற்கோள்: செந்தீ நடராசன் ஐயா கட்டுரைகள்










