பெருமாளா? மலைக்காளியா? குமரனா?
"குமரி, வேங்கடம், குண, குடகடலா
மண்திணி மருங்கின் தண்தமிழ் வரைப்பில்"
-சிலப்பதிகாரம்
புடையல்அம் கழற்கால் புல்லி குன்றத்து
நடைஅரும் கானம் விலங்கி நொன்சிலைத்
தொடைஅமை பகழித் துவன்நிலை வடுகர்
பிழிஆர் மகிழர் கலிசிறந்து ஆர்க்கும்
மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும்
-அகநானூறு
எனவே, வேங்கடமலை தமிழ்நாட்டின் வட எல்லை என்பதும் அம்மலைக்கு அப்பால் பிற மொழி பேசப்பட்ட ‘மொழிபெயர் தேயம்’ இருந்தது என்பதை அறியலாம்.
திருப்பதிமலையிலுள்ள பெருமாளை நீண்ட நாட்களாகவே, அவர் பெருமாளல்ல, முருகப்பெருமான் என ஒரு வதந்தி கிளம்பியது. "குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன்" இருப்பான் என்ற சொலவடையையும் உதாரணம் காட்டி வாதிட்டு வந்தனர்.
"மகா மஹோ பாத்யாய”, அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதியுள்ள “இந்து மதம் எங்கே போகிறது? என்ற நூல்வேறு புதிதாக, அவர் பெருமாள் அல்ல, மலைக்காளியே என்ற புது கருத்தினையும் பதிவிட்டிருந்தார்.
திருப்பதியிலுள்ள மலைமக்கள் காளி சிலையை செய்து வழிட்டதாகவும், அதன்பின் சில பிராமணர்கள் அச்சிலையை சிவபெருமானாக்கி வழிபட்டதாகவும், அதன்பின் அம்மலைமக்களான அம்பட்டையர்களிடம் ஒரு ஒப்பந்தம் செய்து, கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மொட்டையடிக்கும் காணிக்கை அவர்களுக்கும், கோவிலுக்கு உள்ளே வரும் காணிக்கை பிராமணர்களுக்கு எனவும் முடிவெடுத்து அதன்படி வாழ்ந்ததாகவும், அதன்பின் ராமானுஜர் அங்குள்ள சைவர்களிடம் வாதிட்டு அச்சிலையை பெருமாளாக மாற்றினார் எனவும் எழுதியிருந்தார். அதுமட்டுமின்றி அவர் கருவறைக்குள்ளே சென்று பார்த்ததாகவும், அங்கு உள்ளே இருப்பது காளிதான் எனவும் எழுதியிருந்தார். இச்செய்தி பரவலாய் பரவி மேலும் அங்கிருப்பது பெருமாளில்லையோ என்ற அவதூறுவையும் கிளப்பியது.
இவ்வளவு வதந்தியிற்கும் காரணம், உண்மைதகவலை சான்று பகிரும் அக்கோவிலின் கல்வெட்டுகள், பொதுமக்களிடம் சென்று சேரவில்லை என்பதே உண்மை.
இரண்டாம் நந்திவர்மனின் 51 ம் ஆட்சியாண்டு (கி.பி.761) கல்வெட்டு இக்கோவிலை, திருவேங்கட கோட்டத்து குடவூர் நாட்டு திருச்சோகினூர், திருவேங்கட பெருமான் என இன்றைய வேங்கட பெருமாளை அழைக்கிறது. இதிலிருந்து மேற்கண்டவை அனைத்தும் புரளிகள் என்பதை தெள்ளத்தெளிவாக அறியலாம்.மேலும் இக்கோவிலுக்கு பல்லவர் காலத்தில் இருக்கோவேள் மரபினன் "குணஅபராஜிதன்", சோழநாட்டு "உலகப் பெருமான்" என்போரும்,
சோழர்காலத்தில், ராஜராஜனின் பட்டத்து ராணியான தந்திசக்தி விடங்கியின், தந்தை(சக்திவிடங்கன்),தாய்(சாமை) போன்றோரும், சுந்தரசோழரின் மனைவியருள் ஒருவரான "பராந்தகதேவி அம்மன்" என்பவரும், இன்னும் சில முக்கிய அதிகாரிகளும் தானமளித்துள்ளனர். இதுதவிர பாண்டியர், யாதவராயர், பொத்தப்பிசோழர்கள், விஜயநகர அரசர்கள் நிறைய பொன்தானமும், விளக்குதானமும் அளித்துள்ளனர்.
எனவே வீண்புரளிகளை தவிர்த்து "பெருமாளையே" நாம் வணங்குவோம்.
