பாக்குஸ் டயனிஸாஸீம் ஸ்கந்தனும்:
வேதகால ஸ்கந்தன் பலதெய்வங்களின் தன்மையை கொண்டுள்ளதை போன்றே, கிரேக்க தெய்வமான பாக்குஸ் டயனிஸாஸூம் பல வகைகளில் ஸ்கந்தனுடன் ஒற்றுபோகிறார்.
*ஸ்கந்தன் களிப்புகளின் உருவம், டயனிஸாஸூம் ஒயின் எனும் மதுவோடு தொடர்புடையவர்.
*கிரேக்க அக்கினிகடவுளுக்கு பிறந்தவர் டயனிஸாஸ், ஸ்கந்தனும் அவ்வாறே பிறந்தவர்.
*டயனிஸாஸ் "சோம்லே" எனும் பொய்கையிலும், ஸ்கந்தன் "சரவணம்" எனும் ஹேமாலய பொய்கையில் வளர்ந்தவர்கள்.
கிரேக்கர்களது மது மற்றும் களிப்பின் கடவுளான பாக்குஸ் டயானிஸாஸ் போலவே ஸ்கந்தனுக்கும் பல தன்மைகள் இருப்பதை ஆராவமுதன் எனும் அறிஞர் சுட்டிக்காட்டி நீண்டதொரு ஆராய்ச்சிக்கட்டுரை எழுதியுள்ளார்.
தொல்லியல் பார்வையில் ஸ்கந்தன்:
உஜ்ஜயினில் கி.மு 100 -கி.பி 100 ற்கு இடைப்பட்ட ஸ்கந்த உருவம் கொண்ட காசுகள் கிடைத்தது. இதில் "ஸ்கந்த" எனும் எழுத்துப்பொறிப்போடு சேவல்கொடியு, மயில் உருவமும் அதில் இருந்தது. வேறொரு குஷாண மரபினர் வெளியிட்ட காசில் ஸ்கந்தனும், விசாகனும் ஒருவரையொருவர் நோக்குமாறு காசும் கிடைத்தது. யுத்தத்தையே முதன்மை தொழிலாக கொண்ட யௌதேயர் எனும் மரபினர், ஆறுதலைகள் இருகரங்கள் கொண்ட கார்த்திகேயனின் காசுகளை வெளியிட்டுள்ளனர்.
நேற்றைய பதிவில் அக்னியின் புதல்வனாக வேதகாலத்தின் பிற்பகுதியில் கூறப்பட்ட ஸ்கந்தன், அதன்பிறகுள்ள காலங்களில் அக்னியை விடுத்து ருத்ரனின் புதல்வனாய் மெல்ல மெல்ல புகுத்தப்படுகிறார். இவ்வளர்ச்சி நிலையின் அடுத்தபடியாக, இக்கதைகள் வடதமிழகத்தில் மெல்ல, மெல்ல பரவ ஆரம்பித்தது. இதற்கு முக்கிய காரணமாய் வணிகம் சார்ந்த குடிகள் இருந்துள்ளதாய் கருதப்படுகிறது, வடநாட்டுமக்களுடன் நம்மக்கள் வணிகத்தொடர்பு கொண்டதனை அகநானூற்றில் காணலாம்.நந்தர்கள் வடநாட்டில் பாடலிபுத்திரத்தை ஆண்டு வந்தபோது பகைவர் தமது நாட்டைக் கைப்பற்றி விடுவார்கள் என்று எண்ணித் தம்மிடமுள்ள விலை மதிப்பறியாச் செல்வங்களைப் பாதுகாக்க, அவற்றைப் பேழை ஒன்றில் வைத்து அதைக் கங்கை ஆற்றின் அடியில் புதைத்து மறைத்து வைத்த வரலாற்று நிகழ்ச்சியைக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் உணர்த்துகின்றது.
"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇ கங்கை
நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ"
இதிலிருந்து நம் தமிழர்கள் வடஇந்தியரோடு தொடர்புகொண்டமை நன்கு புலப்படும். இனக்குழு சிறுதெய்வங்களில் ஒருவராய் இருந்த முருக-வேலன் வழிபாடு, பிற்காலத்தில் பெருந்தெய்வ வழிபாடாகி மாறிப்போனது. காளிதாஸரின் குமாரசம்பவ கதைகள் பல்லவர்காலத்தில் ஆதரிக்கப்பட்டு உள்நாட்டில் உள்ள பண்பாட்டோடு கலந்து, புதுவிதகருத்தாக்கத்தோடு பரவிய்து.
இதனை வரும் பகுதியினில் காண்போம்.


No comments:
Post a Comment