Tuesday, 6 April 2021

சாதுசூரனும் ஸ்கந்தனும்

 சாதுசூரனும் ஸ்கந்தனும்:


வடஇந்தியாவில் பயின்றுவரும் ஸ்கந்தன் குறித்த சில தரவுகளை காண்போம். வேதத்தில் பிரபலமான தெய்வம் அக்னி, வேதகாலத்திற்கும், உபநிஷத காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் சண்முகம் என்ற கடவுளை கூறுகிறது. இவரை தேவர்கள் சேனையின் தலைவன் என்ற பொருளில் "தேவசேனாபதி" என அழைக்கப்படுகிறார். ஸ்கந்தனை பற்றி அறியும் முன் வேத-உபநிடத காலம் குறித்து சிறிது அறிவோம். 


வேதகாலம் ஏறக்குறைய இன்றைக்கு 3500

ஆண்டுகட்கு முற்பட்டது என்கின்றனர் வடஇந்திய ஆய்வாளர்கள்.

இவ்வேதங்களை மனிதர்கள் ஆக்கவில்லை என்பதும், மானிடத்திற்கு

அப்பாற்பட்ட இறைவனால் ஆக்கப் பெற்றவை என்பதும் இவர்கள் கருத்து,  இவ்வேதங்கள் ரிக், யசுர், சாமம், அதர்வணம்

என்ற நான்காய் சுட்டப்படுகிறது. (இதில் நிறைய முரண்பாடுகள் உள்ளது நான்குவேதங்களில் அதர்வணம் 11ம் நூற்றாண்டை சேர்ந்தது என கூறுபவரும் உலர்)

வேதத்தின் இறுதிப்பகுதியாக உபநிடதங்கள் விளங்குகிறது.

உபநிடதம் என்ற சொல்

ஆர்வத்தோடு அருகிருந்து கேட்டல் என்ற பொருளைத் தரும்.

ஆதலால் ஆசிரியர் சீடனுக்கு உபதேசித்தல் முறையில்

உபநிடதங்கள்     அமைந்தன.     இத்தகைய     உபநிடதங்கள்

இருநூற்றுக்கும் மேற்பட்டவை என்று கூறுவர். குறிப்பிட்ட சில

உபநிடதங்களே தத்துவ ஞானத்திற்கு உட்பட்டவை ஆகும்.

 வேதங்கள் பல்வேறு வேள்விகளை ஆதரித்தன. ஆனால்

உபநிடதங்கள்வேள்விகளை ஏற்காது ஏளனம் செய்தன. இந்த

நிலையில் இந்தியத் தத்துவஞானம் வெகுகாலம் வரை வேத -

உபநிடதங்கள் அளவிலேயே ஆட்பட்டிருந்தது. வேதத்தில்

கூறப்பெற்ற பலதெய்வ வழிபாட்டு முறை மாறி - உபநிடத

காலத்தில் பிரம்மம் என்ற முழுமை நிறைந்த தத்துவ மூலப் பொருள்

வழிபாட்டிற்கு உரியதாக அமைந்தது. உபநிடதங்கள் பல்வேறு

கோணத்தில் பலரால் ஆக்கப் பெற்றமையால் - அவைகளுக்கு

இடையே இருந்த முரண்பாடுகளை அகற்றப் பிரம்மசூத்திரம் எழுந்தது. இதற்கும் பலர் உரை வெவ்வேறு காலகட்டங்களில் எழுதினர்.

வேத-உபநிடத இடைகாலத்தில் ருத்ரன், நந்தி, தந்தி, கருடன், பிரம்மன்,நரசிம்மன், அக்கினி, துர்க்கை, ஆதித்தன் போன்ற தெய்வங்களுடன் ஸ்கந்தனும் வருகிறார். சந்த்யோக உபநிஷதத்தில் சனத்குமாரன், நாரதரிடம் சண்முக கதையை சொல்லும்போது ஸ்கந்தனும், சண்முகனும் ஒன்றே என கூறுகிறார். சந்த்யோக உபநிஷதம் புத்தர் காலத்திற்கும் முந்தையது.

இராமாயண மகாபாரத கால ஸ்கந்தன்:

இராமயணத்தில் அசுரர்களை அழிக்க தேவர்களும், ரிஷிகளும் பிரம்மனிடம் சென்று தமக்கு ஒரு சேனாபதி வேண்டுமென கேட்க, பிரம்மன் அவர்களை அக்னியிடம் அனுப்பினார். கங்கையும், அக்னியும் இணைந்து ஒரு மகனைபெற்று தருவதாய் கூறினார். கங்கைமீது அக்னி தன் வித்தை செலுத்த அக்னியின்ஜீவாலை தாங்காமல் கங்கை திகைக்க,  அந்த வித்துகள் இமாலய அடிவாரத்தில் வைக்கப்பட்டது. அவ்வித்து தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம் என்ற உலோகங்களாய் மாறிற்று, இவ்வுலோகங்கள்ஒன்று சேர குமரன் பிறந்தான். ரிஷிகள் இவனை வளர்க்க கிருத்திகை தேவியரை அமர்த்தினர். இச்செய்தி மிதிலை செல்லும் வழியில் ராமன் இலட்சுமணனுக்கு கூறுகிறார்.

மகாபாரதத்தில் ஸ்கந்தன் கதை வனபர்வதம் 223-232 அத்தியாயம் வரையிலும் காணப்படுகிறது,  சேனை தானவர் எனும்  அசுரனிடம் தோற்ற இந்திரன், தன்னை காப்பாற்ற ஒரு மாவீரனை தேடி அழைந்தார். அச்சமயம் கேசி எனும் ஒரு அசுரன் பிரஜாபதியின் மகள் தேவசேனையை பிடித்து துன்புறுத்தினான். அதைகண்டு வெகுண்ட இந்திரன் அந்த அசுரனை போரிட்டு வென்றார். தன்னை காப்பாற்றியதால் தனக்கு தந்தை ஸ்தானத்தில் இந்திரன் இருக்குமாறு வேண்டி, தனக்கொரு மணமகனை பார்த்து மணமுடித்து வைக்க வேண்டினாள். இந்திரனும் பிரம்மனிடம் சென்று சாதுசூரன்(சுத்தவீரன்) ஒருவனை படைக்க வேண்டினார். பிரம்மனும் அவ்வாறே வரம் அளித்தார். இச்சமயம் சப்தரிஷிகள் பூமியில் யாகம் நடத்தினர், அந்தயாகத்திற்கு இந்திரனும் சென்றார். அங்கு அக்னியும் சென்றார், ரிஷிபத்தினிகள் எழுவர் மேலும் இச்சை கொண்டார், இதனை அறிந்த ரிஷிமனைவிகள் அக்கினியின் மோகத்தை ஏற்காது வெறுப்புற்றனர்.  அவமானத்தால் தற்கொலை செய்ய வனத்தை அடைந்தார் அக்கினி. அங்கு சுவாஹா எனும் பெண் அக்கினியின் மேல் மோகம் கொண்டு, அக்கினியின் கதையை கேட்டறிந்தாள், ரிஷிபத்தினிகள் உங்கள்மேல் மோகம் கொண்டுள்ளார்கள், அவர்களை ஒவ்வொரு நாளிற்கு ஒவ்வொருவராய் அனுப்பி வைக்கிறேன் என கூறி, ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பத்தினியின் உருகொண்டு அக்கினிக்கு இன்பமளித்தாள். ஆனால் அருந்ததியின் கற்பின் வலிமையால் அவ்வுருவை ஏற்கமுடியாமல், அக்கியின் வித்தை சரவணபொய்கையில் கொண்டு சேர்த்தாள். அவ்வித்துக்கள் ஒன்று திரண்டு குழந்தையாயிற்று, சக்தியை ஒருகையிலும் மறுகையில் சேவலையும் கொண்டது. அக்குழந்தை சங்கு எடுத்து ஊதி பெரும் பிரச்சனை செய்தது. இதனால் தேவலோகம் அதிர, அக்குழந்தையை கொல்ல சப்தமாதர்களை தேவலோகம் ஏற்பாடு செய்ய, அக்னியால் அது தடுக்கப்பட்டது. அக்குழந்தைக்கு குழந்தைதன்மை கொடுக்க அக்னியே மூன்று குழந்தையாய் மாறினார். இதன்பின்னும் அக்குழந்தையின் அட்டகாசம் தொடர, அதனை எதிர்த்து இந்திரன் போர்புரிய சென்றார். இந்திரன் தோல்வியடையும் தருவாயில் தனது வச்சிராயுதத்தை ஸ்கந்தன் மேல் பாய்ச்சினார். அப்போது சக்தியின் உருவமாய் விசாகன் தோன்றினார். தன் தவறையுணர்ந்த இந்திரன், ஸ்கந்தனுடன் சமாதனமடைந்து, தம் வளர்ப்புமகளை மணமுடித்து வைத்தார்.

இதுதவிர இரு புராணகதைகளும் உண்டு. ஸ்கந்தனின் தன்மை மற்றும் சில கருத்துகளையும் அடுத்த பகுதியில் காண்போம்.

கீழே புகைப்படத்தில் ஸ்கந்தனும், அக்கினியும்




No comments:

Post a Comment

விநாயகர் சதுர்த்தி

  விநாயகர் சதுர்த்தி  : விநாயகர் தமிழ்க்கடவுளா? ஆரியக்கடவுளா? என்ற விவாதம் தாண்டி, இந்திய அளவில் விநாயகரின் முதல் உருவவழிபாடு நம் தமிழகத்தி...

Other posts in this topic