முருக வணக்கம்:
பரிபாடலுக்கு முன் உள்ள சங்க இலக்கியத்தில் முருகனை குறிக்க தாயின் பெயரினையே அடையாளம் காட்டியுள்ளனர், "பழையோள் சிறுவ", "கொற்றவை செல்வன்" என்ற பெயரிலிருந்து இது நன்கு விளங்கம். இதே காலகட்டத்திற்கு சிறிதுமுன்பு வடஇந்தியாவில் அக்கினியின் முக்கியத்துவம் குறைந்து, ருத்திரனின் முக்கியத்துவம் அதிகரித்தது, உபநிடத காலத்திற்கு பின்உள்ள புராணங்கள் அக்கினியின் புதல்வனான ஸ்கந்தனை ருத்ரனின் புதல்வனாய் அடையாளபடுத்தினர், வேதகாலத்தில் தோற்றுவிக்கப்பட்ட பல ருத்ரர்கள், பிற்காலத்தில் சிவனின் ஒரு கூறாய் ருத்ரன் பாவிக்கப்பட்டு ஈசனின் மகனாய் ஸ்கந்தன் ஆக்கப்பட்டார். இக்காலகட்டத்தில் தான் நம் தமிழகத்திலும் வடக்கத்திய தொடர்பின் காரணமாய் இத்தகைய புராணங்கள் பரவ ஆரம்பித்தது. பரிபாடல் கால முருகவழிபாடு களவு புணர்ச்சியின் காவல் தெய்வமாகவும் இருந்தார். மகளிர் தம் காதல் கைகூட வணங்கிய குறிப்புகள் பரிபாடலில் உண்டு. குறிஞ்சித்திணையில் களவுபுணர்ச்சியும், திருமணமும் ஒருங்கே இருந்தது. எனவே குறிஞ்சித்திணையின் செவ்வேளான முருகன் களவுப்புணர்ச்சியில் வள்ளியை மணந்து கொண்டார். ஸ்கந்தர் புராணம் இணைக்கப்படுகையில் கற்புமணம் புரிந்த தேவசேனை இணைக்கப்படுகிறாள். எனவே காதலுக்கு வள்ளியும், கற்புமணம் சிறப்பாய் ஒரு கருத்தாக்கம் கொண்ட பரிபாடல் காலத்தில் தெய்வானையும் இணைக்கப்படுகிறார்.
வேலன் முருகனை வழிபாடுசெய்தது:
"தேம் படு மலர், குழை, பூந் துகில், வடி மணி,
ஏந்து இலை சுமந்து சாந்தம் விரைஇ,
விடை அரை அசைத்த, வேலன்,கடிமரம்
பரவினர் உரையொடு பண்ணிய இசையினர்,
விரிமலர் மதுவின் மரம் நனை குன்றத்து
கோல் எரி, கொளை, நறை, புகை, கொடி, ஒருங்கு எழ
மாலை மாலை, அடி உறை, இயைநர்,
மேலோர் உறையுளும் வேண்டுநர் யார்"
அழகிய வடிவேலுக்கு மலரும், குழையும், துணியும் சார்த்தி வேலன் சுமந்து வருகிறான். அதன்மீது சாந்தமும், மணமும் பூசியிருக்க, கடம்ப மரத்தின் அடிப்பகுதியில் ஒரு ஆடு கட்டியிருக்க, தீவர்த்திகள் எரிய, உணவும், மதுவும் படைக்கப்பட்டு, இவ்வழிபாட்டின் இன்பத்தை பெறுவோர் சுவர்க்கம் பேண வேண்டும் என ஆசைகொள்வாரோ? என கேட்கிறது பரிபாடல். இம்மக்கள் வீடுபேற்றையும், சுவர்க்த்தினையும் குறித்து பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை, வேலன் எனும் பூசாரி நடத்தும் வெறியாட்டு நிகழ்விலேயே இவர்கள் திருப்தி அடைகிறார்கள் என போகிறபோக்கில் சொல்கிறது இப்பாடல். இது ஒரு Tribal worship ஆகும்.இன்றைய கிராமங்களில் நாம் நமது கருப்பு, சுடலை, வேடியப்பன்களுக்கு கொடுக்கும் கொடை போன்றே இந்நிகழ்வும் ஏறக்குறைய உள்ளது.
பரிபாடலில் வரும் ஏறக்குறைய புராணமயமாக்கப்பட்ட முருகரை அடுத்து காண்போம்.

No comments:
Post a Comment